Wednesday 16 January 2019

முள்ளூர்

முள்ளூர் சொல்லூர்
தொல்லூர் நல்லூர்.
பல்லூர் வல்லூர்
கொள்ளூர் வரதராஜன்
இல்லூர் வாழ்கவே!

கவிராஜர் ஜெனமல்லூர்
புவிவாசம் முள்ளூர்
வரதராஜப் பெருமாளின்
அருள் தாசர் பேச்சியப்பர்
பொருள் பேசும் அடையாளம்
முள்ளூர் வாழ்கவே!!

கல்வி வாசம் அறியாத
கற்காலம் அந்நாளே
சொல் வாக்கு செந்நாக்கு
முள்தாக்கு அனுப்பரிங்கு
செல்வாக்கு பெற்றிருந்தார்
முள்ளூர் வாழ்கவே!

ஊருக்கு அழகர் சாமி
சாமிக்கு  அழகு ஊரு
பேருக்கு அழகு சாமி
அழகுக்கு அழகு யாரூ
யாருக்கும் அழகு நேரு
அதுதான் முள்ளுர் வாழ்க வே!

கொ.பெ.பி.அய்யா.





Friday 14 November 2014

தீரன் சின்னமலை.


தீரன் சின்னமலை.

கண்மணி பாப்பா கதையாக நீகேளு
பொன்மணி பாரதம் பூக்கக் காரணமாரு?
தீரன் வீரன் தென்னாட்டு சூரன்
தீர்த்த கிரிதான் சின்ன மலைதான்.

ஈரோட்டுப் பெருமை பேரான காங்கயம்
பாராட்டு அருமை ஊரான பக்கம்
மேலப் பாளையம் மேதகு சிற்றூர்
ஆளப் பிறந்தவன் ஆண்சிங்கம் பெற்றூர்.

ரத்தின சாமி கவுண்டர் அவர்க்கு
பெற்றாள் பெரியாத்தா பிள்ளை செருக்கு
அட்டியன் தொட்டய்யன் ஆண்ட பரம்பரை
கெட்டியன் தீர்த்தன் கிளைத்தான் பெரும்படை.

ஒன்னம்மாள் கருணை திண்ணமாய் உரனை
தன்னகம் பெருக வண்ணமாய் அரணை
மண்ணது பெருமை எண்ணமாய் திறனை
முன்னவர் அருமை பண்ணினான் அறனை.

வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன்.
வெற்றிகள் வென்றும் பெற்றான் தீரன்.
அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன்.
தன்னிலம் தமக்கென துஞ்சா போரன்.

எங்கோ எவர்க்கோ எதற்கினி வரிப்பணம்
இங்கே இவர்க்கே அதுஇனி உரிப்பணம்.
பறித்தான் அதனை பகிர்ந்தனர் ஏழை.
செறுத்தான் கொங்கன் சிங்கன் காளை.

எவனெனக் கேட்டால் இவனெனச் சொல்லன்
சிவனுக்கும் சென்னிக்கும் இடையென மல்லன்
சின்ன மலையிவன் மன்னவன் வில்லன்
என்னவர் பிழைப்பெதிர் இன்னெவர் தில்லன்

அனைத்து இனத்தையும் அணைத்தே விழித்தான்
முனைத்து பலத்தையும் வளர்த்தே செழித்தான்.
இளைஞர் படையென்று விடைகண்டு துடித்தான்.
பகைஞர் படைகொன்று தடைவென்று முடித்தான்.

கொள்ளையன் வெள்ளையன் இல்லையன் ஆக்க
உள்ளையன் திப்புடன் நல்லுற வாக்க
எல்லை விதித்து தொல்லை எதிர்த்தான்.
இல்லை சரித்திரம் சொல்முன் பதித்தான்.

மைசூர் அரசை மடக்கிய பறங்கியர்
கைவேல் தீரனை கணக்கிடத் துணிந்தார்.
கப்பம் வேண்டியே காலடி பணிந்தார்.
வெப்பம் சீண்டியே கீழடி குனிந்தார்.

பறங்கியர் மிரட்டும் பீரங்கிப் படையும்
கிறங்கப் புரட்டும் தீரன் துணிவிலும்
ஓடா நிலையவன் ஓடா நிலையில் 
கோடாய் அமைத்தான் கோட்டை அரணில்.

பற்றி அன்னியர் படையினை அணைந்தே
சுற்றிச் சூலும் சூதினை அறிந்தே
வெற்றிக் கான ரகசியம் அனுப்பிய
வேலப்பன் நட்பே வீரே வாழ்க!

வேலப்பன் சேதி ஓலை எல்லாம்
காலணிக் குதியில் பதித்து அனுப்பும்
பொல்லான் என்பான் நல்லவன் அருந்ததி
வல்லான் அவன்வழி வாழட்டும் பெரும்பதி.

நேராய் எதிர்த்து போராய் முடிக்க
வீரம் பயந்த வீணர் திகைக்க
சூழ்ச்சி ஆய்ந்தனர் சூரனை அழிக்க
தேர்ச்சி செய்தனர் நல்லான் நடிக்க.

மறைந்து தாக்கவே பதுங்கிய பழனிமலை
நிறைந்து காக்கவே விளங்கிய சின்னமலை
அறிந்து நீக்கவே புரியா பொய்நட்பால்
தெரிந்து சிக்கினான் சிறியன் நல்லனால்.

காட்டிக் கொடுத்தவன் நல்லான் என்பான்.
போற்றி அணைத்தவன் பொல்லான் என்பான்.
பேரால் என்ன புரிந்து நம்பலாம்?
யாரால் என்ன தெளிந்து வாழலாம்?

எங்கோ பிறந்தவன் இங்கே நுழைந்தவன்
தங்கிய உறவரை பங்காய் பிரித்தவன்
ஒற்றுமை குலைத்தவன் பற்றினை மறைத்தவன்
கொட்டிய கொடுமையில் குறுகிக் கிடந்தொமோ!

ஒற்றுமை மறந்தோம் உரிமையைத் துறந்தோம்.
சிற்றறி வாலே சிதைந்து பரந்தோம்.
ஒற்றொரு புள்ளி உலகில் சின்னவன்
பற்றிய எள்ளி பழிக்கும் காலம்.

கொலைப்பழி கூறி கொற்றவன் தீர்த்தனை
மலைப்புகழ் ஏறி நட்டவன் தமிழனை
விலைக்குறி என்றே வீரத்தின் வீரனை
நிலைக்கழி ஏற்றி நேரந்தான் தூக்கினை.

சங்க கிரியிலொரு பங்கம் நேர்ந்ததோ!
சிங்கக் குகையிலொரு சிறுநரி பூந்ததோ!
தங்கப் பாரதம் தன்னிலை இழந்ததோ!
சுங்கம் வரியென சுதந்திரம் மறந்ததோ!

சரணம் என்பதும் சான்றோர்க்கு இல்லை.
மரணம் என்பதும் மறவர்க்கு இல்லை
தருணம் எதிர்த்து விதைஎனப் புதைவான்
கரணம் துடித்து காலத்தில் எழுவான்.

உரமாய் உடலை நிலத்தில் புதைத்தான்
உயிரை உணர்வாய் உலகில் விதைத்தான்
சுதந்திரத் தீயை முதலாய் வளர்த்தவன்
சரித்திரப் பதிவில் ஏனோ மறைந்தான்.

எரிமலைக் குமுறலை எவர்தான் தடுப்பார்
இயற்கையின் திமுறலை எவர்தான் கெடுப்பார்.
புலவர் குழந்தை புண்ணியன் வெடித்தார்
தலைமகன் தீரன் சரித்திரம் படித்தார்.

சின்ன மலையனை எண்ணுதும் பெருமையோ!
கண்ணால் சிலையாக காண்பதும் அருமையோ!
நன்னாள் தானது நட்டதும் தமிழரசோ!
பொன்னார் புரட்சியார் புகழென வாழ்கவே!

சுதந்திரக் காற்றின் சுவாச முதல்வன்---.சின்னமலை.
உதிக்கப் பாரதம் விதைத்தான் தன்னுயிர்--சின்னமலை.
ஒற்றுமை ஒன்றே உரமெனச் சொல்வான்---சின்னமலை.
பெற்ற சுதந்திரம் பேணச் சொல்வான் ---சின்னமலை.

கொ.பெ.பி.அய்யா.

Thursday 14 August 2014

உரிமை நாள்.



உரிமை நாள்!

வெந்தணல் பூத்த விளைவாயெழுந்து—தீவிர
செந்தீ வார்த்த சீற்றஞ்சிவந்து
வெப்பம் தாளாமல் வெள்ளையரகன்று—உரிமை
வீரம் வென்ற நாளின்று.

இந்தியக் கண்டம் இந்தியாவென்று—புதிய
இரண்டாம் பிறப்பு நாளின்று.
இன்றுன் வயதும் அறுபத்தேழோ!—இளமை
இந்தியத் தாயே நீ வாழ்க!

கருணைக் கடலெனச் சிறந்தன்றுஇயற்கை
அருட்கொடை நீயே தாய்தானன்று. .
உரிமைக் குரலது உயிரெனக்கொண்டுதுடிக்கும்
உதிரம் கொட்டியும் ஒலித்தாய்நின்று..

தாயே என்னும் பந்தமுண்டுஅன்பின்
தாராள மடியின் சொந்தங்கொண்டு.
பேதம்பேணா குணமே நன்றுபண்பின்
பெருமை சொன்னது நீயென்று...

புரட்சி என்றொரு சொல்லுண்டுஅதுஉன்
புகழுக் கென்றே நின்றதன்று
வளர்ச்சி என்ற முயற்சிகொண்டு—ஒற்றுமை
வலிமை பெற்றதால் பலனுண்டு.

சுதந்திரம் முயன்று பெற்றதுண்டுஅதுவே
சுயநல வளற்சி ஆனதின்று.
ஜனநாயகம் அதுதான் உயிரென்றுஉலகின்
சரித்திர அடையாளம் போனதின்று..

பொதுவாழ் வென்ற பேச்சுண்டுஆனாலது
பொது ஜனத்தின் தூரமின்று..
அரசியல் நன்று படித்ததுண்டுசாணக்ய
அர்த்த சாஸ்திரம் எதிர்கொண்டு.  

அரசியலொரு தர்ம மென்றுஆண்ட
அறவழிப் பாடம் கொண்டதன்று..
அந்த அரசியல் வணிகமென்றுஅய்யோ
அழகு மாறிப் போனதின்று.

நவயுகம் வார்த்தை நலமுண்டுஅதுவும்
நடப்பினில் நிறைந்தால் மிகநன்று..
ஊழல் தானே ஒழியுமன்றுகணினி
ஆளும் நுட்பம் அமைதலன்று. 

காந்தி ராஜ்ஜியம் காண்பதுண்டுஅவரவர்
கடமை உணர்ந்தால் அமைதியுண்டு.
பரதநாடும் ஒருநாள் ஆவதுண்டு.அன்று
பழமை சிறப்பு பெறுதலுண்டு.

வேற்றுமை போற்றும் சக்திகொண்டு—ஒன்றில்
ஒற்றுமை கூட்டினால் உயர்வுண்டு.
ஆற்றும் பல்வழிக் கூட்டொன்று—திரண்டு
ஏற்றும் நல்வழி சுபமுண்டு.

எனக்கும் கூடஓர் ஆசையுண்டுஅதுஉன்
எதிர்காலம் வல்லரசா வதுகண்டு.
அன்று எனது முக்தியுண்டுஅந்நாள்
அனைத்தும் ஒன்றில் சக்தியுண்டு.
. 
கொ.பெ.பி.அய்யா.



  




Wednesday 6 August 2014

உன்னையே தேடு.



புதிய கீதை.(1)

உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே
கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே
மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!
ஆதி முதலது அன்பினை அமைக்குமோ?
வேதம் அதுதான் என்பதை சமைக்குமோ?

தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்
கர்மம் விலக்கிக் கருக்கும் பொழுதெலாம்
மர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்
துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.

அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.
ஈகை இரக்கம் எனவும் நபிகள்ஆம்
ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்
கொள்ளை கொலையும் கொள்வதும் தொழிலோ?
கள்ளமும் கலையும் பேணுதும் எழிலோ!!
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!
இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!
பின்னொரு வேதம் புரட்சியும் செய்யாமோ!


கொ.பெ.பி.அய்யா.

தொடரும்.      


Sunday 6 July 2014

ஊருக்குத் தெரியும்.


ஊருக்குத் தெரியாதா?

ஊருக்குத் தெரியும் உன்னோட பொழப்பு.
தேருக்கு எதுக்கு தேடுற அழப்பு?
மோருக்குக்குத் தயிருன்னு பேரென்ன சிறப்பு?
யாருக்குப் புரியாது ஆளோட இருப்பு!

என்னென்ன வேசங்கள் இன்னும்தான் போடுற
கண்ணென்ன மோசமா கதமாத்தி ஆடுற
முன்னாடி பின்னாடி கண்ணாடி மூடுற
என்னான்னு எல்லாந்தான் தன்னால காட்டுற.!

வேட்டி ரெண்டாக் கிழிஞ்ச துன்னு 
மாத்தி மாத்திக் கட்டுற—அப்போ
வேலி தாண்டித் திருடும் போது 
கிழிஞ்ச கதையும் மறக்குற.

கோவணமும் உருவிவிழும் கேவலமானாலும்.
காரணமும் காத்துன்னுதான் களவுசொன்னாலும்.
பாவாட திருடவந்த படுவாமாட்டுனே!--செவிடனுக்கும்
சேவல்கூவும் சத்தம் கேக்குண்ணே!

மானம் கெட்டுப் போனே யின்னும்
மாரில் சுட்டக் கோடு ஒண்ணும்
வானம் முட்டக்கூறிச் சிரிக்குமே-
ஊரில் ஏண்டா பொய் உனக்குமே.?.  

கள்ளம்கொண்ட உள்ளம்கொண்டு பள்ளம் நோண்டயிலே
வெள்ளம்கண்டு உள்ளமுங்கி துள்ளும் போதிலே
சொல்லும் சொல்லும் கொல்லுமென்ற மெய்யறியாமலே
அள்ளும்ஊரைக் கொல்லென்பயோ வாய்க் கொழுப்பாலே!

உன்வினையே உன்னழிவே ஆனதென்றாலும்
ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உண்மையதுவாகும்.
தொலைத்த இடம்தேடாமல் பழிப்பதென்னாகும்?
பிழையறியா மூடனே பேச்சென்னாகும்?

சொந்தங்களும் சுற்றங்களும் சுத்தம் செய்யாமல்
வந்தபழி என்னவென்றும் கற்றும் கொள்ளாமல்.
நொந்துமற்ற நேயங்களை குற்றம் சாற்றினால்
எந்தஊர் நாயமாகும் சற்றும் அறிவினால்.
.
கொ.பெ.பி.அய்யா.






Friday 20 June 2014

மனிதன் மாறவேண்டும்.


மாறவேண்டும் மனிதனே!

மாறவேண்டும் மனிதனே
தீரவேண்டும் மயக்கமே!
காரணங்கள் ஆராய்ந்தும்
சேர வேண்டாம் கொள்கைகள்.
தீர்வுக்குத் தேர்வென்ன?
தேடுங்கள் தெளியுங்கள்.

சாதியா வர்க்கமா? சமயமா சாத்திரமா?
ஆதியா அந்தமா?ஆதாரம் தேடாமல்
இம்சைதான் சாபமா?இச்சைதான் பாவமா?
ஆசைதான் அழிவாமா?காரணம் தோண்டாமல்
தீர்வுக்கு வழியென்ன தேடுவோம் வாருங்கள்
தேவைக்குப் பொருளென்ன நாடுவோம் சேருங்கள்.

சான்றோரின் சரித்திரமும் ஆன்றோரின் கருத்தறமும்
தீண்டாத பொருளாச்சோ! வேண்டாத சொல்லாச்சோ!
தருதலைத் தலைவர்கள் திருந்தாத தொண்டர்கள்.
ஒருதலை மயக்கமோ உருப்படா அடிமைகள்
சுயநல வேடத்தில் சொக்கித்தான் கிடந்திடும்
சுதந்திரம் பாவமோ சுபாஸ் விட்ட சாபமோ!

மனிதனை மாற்றத்தான் மார்க்கமென்ன காண்போமோ!.
மனம் நிறைந்த மயக்கத்தை தீர்க்கவென்ன செய்வோமோ!
மாலைக்காக சிலைகளா மனம் மாற்றா நிலைகளா?
வேலையற்ற வெறுங்கல்லா வீணான கலைகளா?
கல்வியெனும் தீர்க்கமதை கசடற வழங்கினோமோ!
வல்லவை ஏதுண்டு வளம்பெற மனித மனமோ!


கொ.பெ.பி.அய்யா.

Thursday 5 June 2014

உழவும் எழுத்தும்.


மகனே எழுந்து விடு.

எழுதிடும் வசமே எழுத்து வரும்.
தொழுதிடும் இடமே துணையும் வரும்.
உழுதிடும் நிலமே உணவு இடும்
அழுதிடும் மகனே எழுந்து விடு.

பழகிடத் தானே பாதை வரும்.
உலவிடத் தானே ஊரு வரும்.
வழிவிடத் தானே வரவு இடும்.
கலங்கிடும் மகனே கவலை விடு.

அறிந்திடும் மனமே அறிவு வரும்.
புரிந்திடும் குணமே .புலமை வரும்.
தெளிந்திடும் அறிவே தீர்வு இடும்.
குழம்பிடும் மகனே கலக்கம் விடு.

தேடிடும் பொழுதே கூடி வரும்.
நாடிடும் பொருளே தேடி வரும்.
முயன்றால் முடிவு முந்தி இடும்
அயர்ந்திடும் மகனே அவலம் விடு.

வண்ணம் பலவும் வரைய வரும்.
வரைய வரைய வடிவம் வரும்.
எண்ணம் அழகினை எழுதி இடும்.
திண்ணம் மகனே தேர்ந்து விடு.

இடிந்த கோவிலும் எழுந்து வரும்.
முடிந்த முன்வினை தொடர்ந்து வரும்.
படிந்து எழுவது பண்பு இடும்.
படிக்கும் மகனே பழகிவிடு.

தீயோர் கூட்டம் ஓடி வரும்.
நேயம் பாடி கூட வரும்.
வாயில் திறந்தால் வரிசை இடும்.
நோயது மகனே தள்ளி விடு.

பாவ வினைகள் பக்கம் வரும்.
கூவம் போலவே சீக்கும் வரும்.
பாவியர் இரக்கம் பாவம் இடும்.
படட்டும் மகனே பாவம் விடு.

கொ.பெ.பி.அய்யா.





http://ayyavinkavithai.blogspot.in/