Monday 7 April 2014

பணம்!

பணம் பணம்

பணம் இருந்தாலே மணம் மணம்!
பணம் இல்லேன்னா பிணம் பிணம்.
பணமும் குணமும் பொருந்தா உறவு—நாறப்
பிணமானாலும் பணமிருந்தாலே கணம் கணம்.

உண்டியல் இல்லா கோவில்கள் இல்லை
உள்ளவன் நுழைவான் சன்னதி எல்லை
தண்டியல் தங்கத்தில் இளித்திடும் பல்லை—சுமந்து
தூக்கவும் கேட்பான் கட்டண வில்லை.

கைகட்டி நிற்பான் பணமில்லா ஏழை.
கடவுளாய்த் தொழுவான் பணமுள்ள ஆளை.
அணுவும் அசையாது அவனன்றி வேளை—ஒரு
பணமின்றி இசையாது பழகியும் வேலை.

கூடுதல் பணமே கோட்டையை பிடிக்கும்.
கொள்கையை விற்றும் குடும்பத்தை வளர்க்கும்.
சத்தியம் எல்லாம் சவக்குழி தள்ளும்—எதையும்
சாதிக்கத் துணிந்தால் சர்வமும் கொல்லும்.

மரணத்தைக்கூட மயக்கம் ஆக்கும்.
வர்ணம் மாறியும் வனப்பில் பூக்கும்.
இன்று நடப்பதை என்றோ மாற்றும்---ஐயோ
ஒன்றுக்கு மாகாததை நன்றெனப் போற்றும்.

கொ.பெ.பி.அய்யா. 



Friday 4 April 2014

கண்ணாடி.

கண்ணாடி

கண்ணாடி என்னதான்  சொல்லுது?
முன்னாடி உண்மைதான் காட்டுது.
ஒன்பதும் உன்னிடம் இருக்குது.
என்பதும் எண்ணிட விளக்குது.

அகத்தினில் உள்ளதை வரையுது
முகத்தினில் அப்படியே தெரியுது.
நிசமான உன்முகம் மறையுது.
வசமான உன்னகம் நிறையுது.

எண்ணம் குளிர்ந்த உணர்ச்சியை.
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை.
வண்ணம் கவர்ந்த நெகிழ்ச்சியை
சொல்லும் வதனம் மலர்ச்சியை.

இன்பம் துன்பம் எதுவானாலும்
எண்ணும் வண்ணம் இரண்டானாலும்
எழுதிச் சொல்லும் வெவ்வேறாய்
இதயம் பதித்த முகவுரையாய்.

கோபம் தாபம் கொந்தளிப்பில்
குழம்பிக் கிடக்கும் அவசரத்தில்
பாவம் புண்ணியம் தெளியாமல்
படும்முன் உணர்க முகவரியில்.

தெளியா மனதினில் தேடாதே!
விழியா உணர்விடம் கூடாதே!
புரியா மொழியதில் படிக்காதே!
அறியா முகத்துடன் தொடராதே!

கண்ணாடி முன்னின்று உனைத்தேடு
பின்னாடி பின்னன்று தனைக்கூடு.
எண்ணாடி ஒண்ணின்று உரம்தீட்டு.
நன்றென்று வாழ்கவே தரம்சூட்டு.

கொ.பெ.பி.அய்யா.