Sunday, 21 December 2025

இன்னொரு சுதந்திரம்.




இன்னொரு சுதந்திரம்.

நாட்டுப் பற்று வாக்காளனுக்கு
வீட்டுப்பற்று வேட்பாளனுக்கு
ஒட்டுப்பற்று ஊழலுக்கு.

வெக்கமில்லை அரசியலுக்கு.
விபரமில்லை மக்களுக்கு.
விளக்கமில்லை தேர்தலுக்கு.

கோழி கூவப் போவதில்லை.
கோழை ஏவப் போவதில்லை.
காலம் விடியப் போவதில்லை.

சொன்ன சொல் நினைப்பதார்?
முன்னை வினை எண்ணுவதார்?
பண்ணும் செயல் தெளிவதார்?

நாட்டுக்கான கட்சி உண்டோ?
நட்ட கொள்கை நிலையுண்டோ?
கோட்டையன்றி வேறுண்டோ?

ஓட்டுக்குத்தான் நீ வேணும்.
ஓடி வந்து தான் காணும்.
உன்னைப் பின்னே யார் பேணும்?

சொல்வதெல்லாம் பொய்யன்றி
கொள்வதெல்லாம் வேடமன்றி
நல்லதில்லை சுரண்டலின்றி.

சொந்தங்களும் சொத்துக்களும்
சுகமாக வாழ்வதற்கும்
தொண்டனே காவலாம்.

பொறுத்தார் பூமியாள்வார்
பொங்கினார் காடாள்வார்
பாவிகளே நாடாள்வார்.

வேறென்ன செய்யலாம் மந்திரம்?.
விதியென்ன மாற்றலாம் எந்திரம்?
வென்றெடு இன்னொரு சுதந்திரம்..

கொ.பெ.பி.அய்யா.






ஈழத்தின் ஆவிகள்.

ஈழத்தின் ஆவிகள் பேசுகின்றன.
நாடகக்காரர்களை நம்பும் நிலை இதுதான்.பாவம்! இன்றுணர்ந்த
ஆவிகள் நாங்கள் அன்றே அவர்களைப் பற்றி விசாரித்திருந்தால்.இத்தனை இழப்பு ஒருவேளை நிகழாமல் நிலைமையும் சரியாகி இருக்கலாம்.
காப்பேன் காப்பேன் எனக்கூறி ஒரேஅடியாகக்கவிழ்த்துவிட்டார்கள்
எல்லாம் முடிந்து இப்போது இழவு வீட்டில் நீலிக்கண்ணீர் வடித்து 
நடிக்கிறார்கள்.தலைவன் செத்தவீட்டில் அடுத்த தலைவன் நானே 
என்று இழவு வீட்டாரையே அவர்கள் வாயால் அறிவிக்கசெய்யும் 
தந்திரக்கரர்கள் இவர்கள்.புயல் ஓய்ந்த பின் பிணங்களில் ஒட்டிக் 
கொண்டிருக்கும் காதணிகளைக் கழட்டிக்கொண்டிருக்கிரார்கள் 
பாவிகள்.இவர்கள் எப்போதும்போல் இப்போதும் சும்மா இருந்தாலே மிஞ்சி இருப்பவர்களாவது ஆவிகளாகாமல் மிஞ்சுவார்கள்.

தாய் மனசே

புறிகிறதா தாய்மனசு?

எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே
கனவே மகனே என் மகனே!
காலம் விடியட்டும் என்மகனே!

உன்னை ஈன்றிடும் போது—கொண்ட
உவகையில் நான் உயிர்த்து.
உலகில் வாழ்கிறேன் என் உறவே!
நான் வாழ்வதன் அர்த்தமே!
நீ வாழ்வதைக் காண்பதே.
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

காலம் கைகூட நாலும் நீ தேட
வளரும் கல்வி பெறவே
நாளும் நானும் உயிர்க்கிறேன்  
கேளு அன்பு மகனே!
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

தாயின் மனம் போலும் நின்று வாழ
சேயின் வளம்காண என் நாளில்
நான் உன் நலம் நோக்கி இருக் கிறேன்
வாழ்வும் இனி நீயே மகனே!
கெடும் குடி காரன் ஆக மாறி
படு வதும் ஏன் மகனே கூறய்யா!
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

உயிரின் உயிராக உனையே நினைவாக
உணரந்தேன் நானும் பாவி`
பிறப்பின் பயனாக வாழ்வின் சுகமாக
தொடர்ந்தேன் நானும் உயிரே!
பாவம் நினைக்காத அன்னை மனமே
பார்த்துத் துடிக்கிறேன் தினமே.
ஆடிக் கிடந்தாலும் பிள்ளை தானென
அதுவாய் அழுகுது தேடியே!
அன்பு மகனே ஆசை வரமே
அழிக்கும் குடியும் ஏனடா?
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

கொ.பெ.பி.அய்யா

Saturday, 20 December 2025

வீடு ஒரு கனவு.

வீடு

வீடு..... அதுதான்
அனைவரது கனவு.
சொந்தமாக ஒரு வீடு
அதுதானே சுகம்
சுதந்திரம் எல்லலாமே.

வாடகை வீடு..........
வசதிகள் கரைகிறது.
ஆனால்.............................
வாடகை மட்டும்
 வருடா வருடம் ஊதுகிறது.
மின்சார கட்டணமோ!
அது ஒரு......................
குட்டி வாடகை.
மற்றும் முறைவாசல்
தண்ணீர்க்கென
இப்படி எத்தனையோ
துணை வாடகைகள்.

சட்டமன்றங்களில்
எதையெதையோ
பேசுகிறார்கள்--ஆனால்
இதைமட்டும் பேச
அஞ்சுறார்கள்.
ஓட்டு வங்கியைக்
கணக்குப் போட்டு
ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆளுக்கு ஒரு
வீடு என்கிறார்கள்.
ஆனால் அதுவும்
அரசியல்வாதிகளுக்கே
அலாட்டாகி விடுகிறது.
ஏழையைக் காட்டிப்
பேசுகிறார்கள்.--ஆனால்
பிழைப்ப தெல்லாம்
பெரியவர்கள்தான்.
அன்றாட உழைப்பு
அரை வயிற்றுக்கும்
போதவில்லை.

மையானத்தில்கூட
இடமில்லை.
மைதானங்களும்
காலி இல்லை.
அவரவர் ஆட்சியில்
அவரவர் வளைத்துக்
கொண்டார்கள்.

விலைவாசியோ
விண்ணை  முட்டுகிறது.
நிலம் என்பதோ
நித்தரையிலும்
தோன்றவில்லை
உறக்கமும் தொலைந்தது
ஓய்வெடுத்தால்
கஞ்சியில்லை.
மனைகளோ!
இலட்சங்கள் கோடிகள்.

விலங்குக்குக் குகையுண்டு
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
தொழுவம்  உண்டு
கோழிக்கும் கூண்டுண்டு.
பறவைக்கும் கூடுண்டு..
ஆனால் மனிதனுக்கு.................!

.வீடு ..................!.அது
ஒரு கனவு.



கொ.பெ.பி.அய்யா






Friday, 19 December 2025

மணமகனே

மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!
மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!


தனமிருக்கும் பணமிருக்கும் அந்த நாட்டில்—நல்ல
சனமிருக்கும் மனமிருக்கும் இந்த நாட்டில்.
நாஉரையும் நாடகம்தான் சென்ற நாட்டில்—மெய்
நாநயமும் நேர்முகமும் சொந்த நாட்டில்

(மணமகனே)மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!

கற்ற பாடம் உற்ற நடை நாடு நமது வீடு--நெஞ்சில்
மற்றவரை கணம்மதித்து வாழும் அழுகு கூடு.
நல்லவர்கள் நண்பராக தேடும் பண்பாடு.---உறவில்
பச்சமுடன் பாச மணம் வீசும் நேசமேடு.

ஆபரணம் காவரணும் சிறப்பிருக்காது.—திருமணம்
ஆகவரும் மாப்பிளைக்கும் குறைவிருக்காது  
எந்நாளும் நன்னாளே மனம்சலிக்காது.—இருமனம்
கண்ணாலும் உண்பதற்கும் புளிப்பிருக்காது
மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!

Monday, 15 December 2025

மனிதன் மாறவேண்டும்.


மாறவேண்டும் மனிதனே!

மாறவேண்டும் மனிதனே
தீரவேண்டும் மயக்கமே!
காரணங்கள் ஆராய்ந்தும்
சேர வேண்டாம் கொள்கைகள்.
தீர்வுக்குத் தேர்வென்ன?
தேடுங்கள் தெளியுங்கள்.

சாதியா வர்க்கமா? சமயமா சாத்திரமா?
ஆதியா அந்தமா?ஆதாரம் தேடாமல்
இம்சைதான் சாபமா?இச்சைதான் பாவமா?
ஆசைதான் அழிவாமா?காரணம் தோண்டாமல்
தீர்வுக்கு வழியென்ன தேடுவோம் வாருங்கள்
தேவைக்குப் பொருளென்ன நாடுவோம் சேருங்கள்.

சான்றோரின் சரித்திரமும் ஆன்றோரின் கருத்தறமும்
தீண்டாத பொருளாச்சோ! வேண்டாத சொல்லாச்சோ!
தருதலைத் தலைவர்கள் திருந்தாத தொண்டர்கள்.
ஒருதலை மயக்கமோ உருப்படா அடிமைகள்
சுயநல வேடத்தில் சொக்கித்தான் கிடந்திடும்
சுதந்திரம் பாவமோ சுபாஸ் விட்ட சாபமோ!

மனிதனை மாற்றத்தான் மார்க்கமென்ன காண்போமோ!.
மனம் நிறைந்த மயக்கத்தை தீர்க்கவென்ன செய்வோமோ!
மாலைக்காக சிலைகளா மனம் மாற்றா நிலைகளா?
வேலையற்ற வெறுங்கல்லா வீணான கலைகளா?
கல்வியெனும் தீர்க்கமதை கசடற வழங்கினோமோ!
வல்லவை ஏதுண்டு வளம்பெற மனித மனமோ!


கொ.பெ.பி.அய்யா.

Saturday, 13 December 2025

இரங்கல் பா

அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ
புரட்சித் தலைவி புகழே நீ
உழைத்துக் களைத்து அவர்நிழலே
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவி தானென்றோம்
நிறைந்தும் தமிழகம் நீயாக
பரந்தும் துணைசெய் தாயாக.

அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.

Tuesday, 9 December 2025

மாவிளக்கு

மாவிளக்கு அணிவகுப்பு
பத்திரகாளி கோவிலுக்கு.
கொட்டு மேளம் நாதஸ்வரம்
குலவை ஒலி சேர்ந்த கூட்டம்.

வேப்பிலைத் தோரணங்கள்
வீதியெல்லாம் அலங்காரங்கள்
காப்புக் கட்டி சாமி ஆட்டம்
களைகட்டும் கரகாட்டம்.

சாமி கூடி ஆடி வரும்.
ஆசாமிகள் பாடி வரும்.
கேட்டு வேண்டும் வரமெல்லாம்.
நீட்டிக் கை அருள் வழங்கும்.

உனக்குள்ளும் சாமி உண்டும்.
உள்ளிருந்து அது தூண்டும்.
உன்னைத் தன்னை மறக்கச் செய்யும்.
உன்னில் தானே  சாமி வரும்.

பொங்கலிட வெண்கலமும்
தங்கமாக மின்னலிடும்.
மங்கையர்கள் சுங்கடிகள்
திங்ககளாகக் கூடிவரும்.

விண்சிந்தும் நட்சத்திரங்கள்
பெண்கள் கூட்டம் விசித்திரங்கள்.
கருமேகம் ஓட்டங்களோ !
கார்குழலாம் கூட்டங்களோ!

காளையர் வட்டங்களோ!
வாலைய்ர் கூட்டங்களோ!
சேலையர் வண்ணங்களோ
கலை அழகுச் சித்திரங்களோ!

எண்ணக் காளை ரசித்திருப்பர்.
வண்ணப் பெண் இசைந்திருப்பர்.
திண்ண மாய்த் தெரிந்திருப்பர்.
பெண்பார்த்துத் தேர்ந்திருப்பர்.

மஞ்சள் நீர் அஞ்சி ஓடும்--
மாப்பிள்ளைகள் கெஞ்சி ஓடும்.
கொஞ்சி இளம் வஞ்சி தேடும்
நெஞ்சழகன் நெஞ்சம் கூடும்.

சொந்தம் எல்லாம் கூடிவரும்
பந்தம் கூடித் தான் மகிழும்.
சொந்தம் பந்தம் தொடர்வதற்கும்
சம்மந்தங்கள் கூடி வரும்.

ஊரெல்லாம் ஒன்று கூடும்.
உள்ப்பகைககள் தானே ஓடும்.
தேர் இழுத்து ஊர் சேரும்.
ஊர் வலுத்து தேர் சேரும்.

நீதிக் கலை நிகழ்ச்சிகளும்.
சேதி விளை ஆட்டங்களும்.
ஓதும் நல் மந்திரங்களும்.
சூது வெல்லும் தந்திரங்களாம்.

வருடம் தோறும் கொண்டாட்டம்.
வாழ்வு அதை நிலை நாட்டும்.
பெருகி வரும் உறவுகளை
பிணைத்து அது தொடராக்கும்.

கவிஞர். கொ. பிச்சையா

Sunday, 7 December 2025

அம்மாக் கடன்

அம்மா

அம்மா என்னும் சொல்லுக்கு
அர்த்தம் என்ன பதிலிருக்கு.
அன்புக் கென்ன பொருளிருக்கும்
அம்மா என்றே விடை யிருக்கும்.

என் வலிக்கு அவளழுவாள்
தன்வலியை தான் மறைப்பாள்.
என் பசி அவளுணர்வாள்
தன்பசியைத் தான் மறுப்பாள்.

அழுவது நானானால்
கண்ணீரை அவள் வடிப்பாள்.
ஏனென்று அறிவதற்கு 
எந்த நூல் விடை படிக்கும்.

அன்னையவள் பாசத்திற்கு
அடுத்தென்ன சொல்லிருக்கும்.
என்ன ஏதும் சொல்லுவாளோ 
நான் பட்ட கடன் கணக்கு.

அம்மா தந்தப் பால்க் கணக்கு அதற்கென்ன எழுத்திருக்கும்.
நோய்த் தடுப்பு மருந்ததற்கும்
தாய்ப்பாலே தீர்விருக்கும்.

தூங்காமல் விழித்ததற்கும்
தூக்கியென்னை வளர்த்ததற்கும்
வழிபார்த்துக் காத்திருப்பாள்.
வாசல் நின்று பாத்திருப்பாள்.

வரவென்ன நினைத்திருப்பாள்.
உறவொன்றே மகிழ்ந்திருப்பாள்.
நிறைவென்று நிறைந்திருப்பாள்
வரவென்னில் கரைந்திருப்பாள்.

தூளி சொன்னப் பாட்டுக்கும்
தோள் சுமந்தப் பாட்டுக்கும்
வாழ்ந்த அவள் கருவறைக்கும்
வரிக்கென்ன கணக்கிருக்கும்.

ஊட்டி ஊட்டி வளர்தாளுக்கு
ஊட்டி க் கடன் தீர்த்தேனோ!
நேர்த்திக் கடன் செய்தேனோ!
நேர்ந்து கடன் தீர்த்தேனோ!

என் பசி உணர்ந்தவளை,
தன் பசி மறந்தவளை,
ஊட்டியாளுக்கு ஊட்டி னேனோ!
ஒரு கடனும் தீர்த்தேனோ!

கழுவிக் காத்தத் தாயாளின்
கடன் குறைய என்ன செய்தேன்.?
வழுவி வழுவிக் கடந்தேனோ!
நழுவி வழுவிக் கிடந்தேனோ!

மொழி தந்தாய் புரிவதற்கு.
வழி சொன்னாய் வாழ்வதற்கு.
பழிநேராக் காத்தக் கடன்
கழிப்பதெப்போ ஆத்தாளுக்கு?

மஞ்சம் நான் அமர்வதற்கு
பஞ்சமான வள்ளலுக்கு
வெஞ்சாமரம் வீசுதற்கு
வேண்டி நான் என்ன செய்தேன்.

என்னை யீன்ற தாயுனக்கு
என் பிள்ளை பரிசுனக்கு.
உன் பெருமை சொல்வதற்கு
உன் பேரே காப்பதற்கு!

கடன் பட்டேன் தாயுனக்கு!
கலங்குதே நெஞ்செனக்கு!
உடன் பட்டேன் நானுனக்கு
உற்ற தெய்வம் வேறெதற்கு?

தாயினும் சிறந்ததற்கு
தவம் உண்டோ பெறுவதற்கு?
கோயிலும் நீ எனக்கு!
குல தெய்வம் நீ எனக்கு

கவஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 6 December 2025

தீரன் சின்ன மலை

தீரன் சின்னமலை வீரன்.

கண்மணிப் பாப்பா கதையாக நீ கேளு
பொன்மணி பாரதம் பூக்கக் காரணமாரு?
தீரன் வீரன் தென்னாட்டுச் சூரன்
தீர்த்த கிரிதான் சின்ன மலைதான்.

ஈரோட்டுப் பெருமை பேரான காங்கயம்
பாராட்டு அருமை ஊரான பக்கம்
மேலப் பாளையம் மேதகு சிற்றூர்
ஆளப் பிறந்தவன் ஆண்சிங்கம் பெற்றூர்.

ரத்தின சாமி கவுண்டர் அவர்க்கு
பெற்றாள் பெரியாத்தா பிள்ளை செருக்கு
அட்டியன் தொட்டய்யன் ஆண்ட பரம்பரை
கெட்டியன் தீர்த்தன் கிளைத்தான் பெரும்படை.

ஒன்னம்மாள் கருணை திண்ணமாய் உரனை
தன்னகம் பெருக வண்ணமாய் அரணை
மண்ணது பெருமை எண்ணமாய் திறனை
முன்னவர் அருமை பண்ணினான் பெருமை.

வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன்.
வெற்றிகள் வென்றும் பெற்றான் தீரன்.
அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன்.
தன்னிலம் தமக்கென துஞ்சா போரன்.

எங்கோ எவர்க்கோ எதற்கினி வரிப்பணம்
இங்கே இவர்க்கே அதுஇனி உரிப்பணம்.
பறித்தான் அதனை பகிர்ந்தனர் ஏழை.
செறுத்தான் கொங்கன் சிங்கன் காளை.

எவனெனக் கேட்டால் இவனெனச் சொல்லென
சிவனுக்கும் சென்னிக்கும் இடையே மல்லனென
சின்ன மலையிவன் மன்னவன் வில்லன்
என்னவர் பிழைப்பெதிர் எவரெனத் தில்லன்

அனைத்து இனத்தையும் அணைத்தே விழித்தான்
முனைத்து பலத்தையும் வளர்த்தே செழித்தான்.
இளைஞர் படையென்று விடைகண்டு துடித்தான்.
பகைஞர் படைகொன்று தடைவென்று முடித்தான்.

கொள்ளையன் வெள்ளையன் இல்லையன் ஆக்க
உள்ளையன் திப்புடன் நல்லுற வாக்க
எல்லை விதித்து தொல்லை எதிர்த்தான்.
இல்லை சரித்திரம் சொல்முன் பதித்தான்.

மைசூர் அரசை மடக்கிய பறங்கியர்
கைவேல் தீரனை கணக்கிடத் துணிந்தார்.
கப்பம் வேண்டியே காலடி பணிந்தார்.
வெப்பம் சீண்டியே கீழடி குனிந்தார்.

பறங்கியர் மிரட்டும் பீரங்கிப் படையும்
கிறங்கப் புரட்டும் தீரன் துணிவிலும்
ஓடா நிலையவன் ஓடா நிலையில் 
கோடாய் அமைத்தான் கோட்டை அரணில்.

பற்றி அன்னியர் படையினைத் துணிந்தே
சுற்றிச் சூலும் சூதினை அறிந்தே
வெற்றிக் கான ரகசியம் அனுப்பிய
வேலப்பன் நட்பே வீரே வாழ்க!

வேலப்பன் சேதி ஓலை எல்லாம்
காலணிக் குதியில் பதித்து அனுப்பும்
பொல்லான் என்பான் நல்லவன் அருந்ததி
வல்லான் அவன்வழி வாழட்டும் பெரும்பதி.

நேராய் எதிர்த்துப் போராய் முடிக்க
வீரம் பயந்த வீணர் திகைக்க
சூழ்ச்சி ஆய்ந்தனர் சூரனை அழிக்க
தேர்ச்சி செய்தனர் நல்லான் நடிக்க.

மறைந்து தாக்கவே பதுங்கிய பழனிமலை
நிறைந்து காக்கவே விளங்கிய சின்னமலை
அறிந்து நீக்கவே புரியா பொய்நட்பால்
தெரிந்து சிக்கினான் சிறியன் நல்லனால்.

காட்டிக் கொடுத்தவன் நல்லான் என்பான்.
போற்றி அணைத்தவன் பொல்லான் என்பான்.
பேரால் என்ன புரிந்து நம்பலாம்?
யாரால் என்ன தெளிந்து வாழலாம்?

எங்கோ பிறந்தவன் இங்கே நுழைந்தவன்
தங்கிய உறவரை பங்காய் பிரித்தவன்
ஒற்றுமை குலைத்தவன் பற்றினை மறைத்தவன்
கொட்டிய கொடுமையில் குறுகிக் கிடந்தோமோ!

ஒற்றுமை மறந்தோம் உரிமையைத் துறந்தோம்.
சிற்றறி வாலே சிதைந்து பரந்தோம்.
ஒற்றொரு புள்ளி உலகில் சின்னவன்
பற்றிய எள்ளி பழிக்கும் காலம்.

கொலைப்பழி கூறி கொற்றவன் தீர்த்தனை
மலைப்புகழ் ஏறி நட்டவன் தமிழனை
விலைக்குறி என்றே வீரத்தின் வீரனை
பிழைப்பழி ஏற்றி நேரந்தான் தூக்கினை.

சங்க கிரியிலொரு பங்கம் நேர்ந்ததோ!
சிங்கக் குகையிலொரு சிறுநரி பூந்ததோ!
தங்கப் பாரதம் தன்னிலை இழந்ததோ!
சுங்கம் வரியென சுதந்திரம் மறந்ததோ!

சரணம் என்பதும் சான்றோர்க்கு இல்லை.
மரணம் என்பதும் மறவர்க்கு இல்லை
தருணம் எதிர்த்து விதைஎனப் புதைவான்
கரணம் துடித்து காலத்தில் எழுவான்.

தூக்கின் சுருக்கினை நோக்கினில் பறித்தான்.
ஆக்கினைத் தலையினை சீக்கிரம் நுழைத்தான்.
தீக்கிணைத் தன்னுயிர் போக்கினில் விடுத்தான்.
வாக்கினைப் பின்னவர் தொடுத்திடத் தொடுத்தான்.

உரமாய் உடலை நிலத்தில் புதைத்தான்
உயிரை உணர்வாய் உலகினில் விதைத்தான்
சுதந்திரத் தீயை முதன்மை வளர்த்தான்
சரித்திரப் பதிவில் ஏனோ மறைந்தான்.

எரிமலைக் குமுறலை எவர்தான் தடுப்பார்
இயற்கையின் திமுறலை எவர்தான் கெடுப்பார்.
கவிஞர் பிச்சையா கவிதை வடித்தார்.
தலைமகன் தீரன் சரித்திரம் படித்தார்.

சின்ன மலையனை எண்ணுதும் பெருமையோ!
கண்ணால் சிலையாக காண்பதும் அருமையோ!
நன்னாள் தானது நட்டதும் தமிழரசோ!
பொன்னார் புரட்சியார் புகழென வாழ்கவே!

சுதந்திரக் காற்றின் சுவாச முதல்வன்---.சின்னமலை.
உதிக்கப் பாரதம் தன்னனயே விதைத்தான்--சின்னமலை.
ஒற்றுமை ஒன்றே உரமெனச் சொன்னான்---சின்னமலை.
பெற்ற சுதந்திரம் பேணச் சொன்னான் ---சின்னமலை.கண்மணிப் பாப்பா கதையாக நீ கேளு
பொன்மணி பாரதம் பூக்கக் காரணமாரு?
தீரன் வீரன் தென்னாட்டுச் சூரன்
தீர்த்த கிரிதான் சின்ன மலைதான்.

ஈரோட்டுப் பெருமை பேரான காங்கயம்
பாராட்டு அருமை ஊரான பக்கம்
மேலப் பாளையம் மேதகு சிற்றூர்
ஆளப் பிறந்தவன் ஆண்சிங்கம் பெற்றூர்.

ரத்தின சாமி கவுண்டர் அவர்க்கு
பெற்றாள் பெரியாத்தா பிள்ளை செருக்கு
அட்டியன் தொட்டய்யன் ஆண்ட பரம்பரை
கெட்டியன் தீர்த்தன் கிளைத்தான் பெரும்படை.

ஒன்னம்மாள் கருணை திண்ணமாய் உரனை
தன்னகம் பெருக வண்ணமாய் அரணை
மண்ணது பெருமை எண்ணமாய் திறனை
முன்னவர் அருமை பண்ணினான் பெருமை.

வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன்.
வெற்றிகள் வென்றும் பெற்றான் தீரன்.
அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன்.
தன்னிலம் தமக்கென துஞ்சா போரன்.

எங்கோ எவர்க்கோ எதற்கினி வரிப்பணம்
இங்கே இவர்க்கே அதுஇனி உரிப்பணம்.
பறித்தான் அதனை பகிர்ந்தனர் ஏழை.
செறுத்தான் கொங்கன் சிங்கன் காளை.

எவனெனக் கேட்டால் இவனெனச் சொல்லென
சிவனுக்கும் சென்னிக்கும் இடையே மல்லனென
சின்ன மலையிவன் மன்னவன் வில்லன்
என்னவர் பிழைப்பெதிர் எவரெனத் தில்லன்

அனைத்து இனத்தையும் அணைத்தே விழித்தான்
முனைத்து பலத்தையும் வளர்த்தே செழித்தான்.
இளைஞர் படையென்று விடைகண்டு துடித்தான்.
பகைஞர் படைகொன்று தடைவென்று முடித்தான்.

கொள்ளையன் வெள்ளையன் இல்லையன் ஆக்க
உள்ளையன் திப்புடன் நல்லுற வாக்க
எல்லை விதித்து தொல்லை எதிர்த்தான்.
இல்லை சரித்திரம் சொல்முன் பதித்தான்.

மைசூர் அரசை மடக்கிய பறங்கியர்
கைவேல் தீரனை கணக்கிடத் துணிந்தார்.
கப்பம் வேண்டியே காலடி பணிந்தார்.
வெப்பம் சீண்டியே கீழடி குனிந்தார்.

பறங்கியர் மிரட்டும் பீரங்கிப் படையும்
கிறங்கப் புரட்டும் தீரன் துணிவிலும்
ஓடா நிலையவன் ஓடா நிலையில் 
கோடாய் அமைத்தான் கோட்டை அரணில்.

பற்றி அன்னியர் படையினைத் துணிந்தே
சுற்றிச் சூலும் சூதினை அறிந்தே
வெற்றிக் கான ரகசியம் அனுப்பிய
வேலப்பன் நட்பே வீரே வாழ்க!

வேலப்பன் சேதி ஓலை எல்லாம்
காலணிக் குதியில் பதித்து அனுப்பும்
பொல்லான் என்பான் நல்லவன் அருந்ததி
வல்லான் அவன்வழி வாழட்டும் பெரும்பதி.

நேராய் எதிர்த்துப் போராய் முடிக்க
வீரம் பயந்த வீணர் திகைக்க
சூழ்ச்சி ஆய்ந்தனர் சூரனை அழிக்க
தேர்ச்சி செய்தனர் நல்லான் நடிக்க.

மறைந்து தாக்கவே பதுங்கிய பழனிமலை
நிறைந்து காக்கவே விளங்கிய சின்னமலை
அறிந்து நீக்கவே புரியா பொய்நட்பால்
தெரிந்து சிக்கினான் சிறியன் நல்லனால்.

காட்டிக் கொடுத்தவன் நல்லான் என்பான்.
போற்றி அணைத்தவன் பொல்லான் என்பான்.
பேரால் என்ன புரிந்து நம்பலாம்?
யாரால் என்ன தெளிந்து வாழலாம்?

எங்கோ பிறந்தவன் இங்கே நுழைந்தவன்
தங்கிய உறவரை பங்காய் பிரித்தவன்
ஒற்றுமை குலைத்தவன் பற்றினை மறைத்தவன்
கொட்டிய கொடுமையில் குறுகிக் கிடந்தோமோ!

ஒற்றுமை மறந்தோம் உரிமையைத் துறந்தோம்.
சிற்றறி வாலே சிதைந்து பரந்தோம்.
ஒற்றொரு புள்ளி உலகில் சின்னவன்
பற்றிய எள்ளி பழிக்கும் காலம்.

கொலைப்பழி கூறி கொற்றவன் தீர்த்தனை
மலைப்புகழ் ஏறி நட்டவன் தமிழனை
விலைக்குறி என்றே வீரத்தின் வீரனை
பிழைப்பழி ஏற்றி நேரந்தான் தூக்கினை.

சங்க கிரியிலொரு பங்கம் நேர்ந்ததோ!
சிங்கக் குகையிலொரு சிறுநரி பூந்ததோ!
தங்கப் பாரதம் தன்னிலை இழந்ததோ!
சுங்கம் வரியென சுதந்திரம் மறந்ததோ!

சரணம் என்பதும் சான்றோர்க்கு இல்லை.
மரணம் என்பதும் மறவர்க்கு இல்லை
தருணம் எதிர்த்து விதைஎனப் புதைவான்
கரணம் துடித்து காலத்தில் எழுவான்.

தூக்கின் சுருக்கினை நோக்கினில் பறித்தான்.
ஆக்கினைத் தலையினை சீக்கிரம் நுழைத்தான்.
தீக்கிணைத் தன்னுயிர் போக்கினில் விடுத்தான்.
வாக்கினைப் பின்னவர் தொடுத்திடத் தொடுத்தான்.

உரமாய் உடலை நிலத்தில் புதைத்தான்
உயிரை உணர்வாய் உலகினில் விதைத்தான்
சுதந்திரத் தீயை முதன்மை வளர்த்தான்
சரித்திரப் பதிவில் ஏனோ மறைந்தான்.

எரிமலைக் குமுறலை எவர்தான் தடுப்பார்
இயற்கையின் திமுறலை எவர்தான் கெடுப்பார்.
கவிஞர் பிச்சையா கவிதை வடித்தார்.
தலைமகன் தீரன் சரித்திரம் படித்தார்.

சின்ன மலையனை எண்ணுதும் பெருமையோ!
கண்ணால் சிலையாக காண்பதும் அருமையோ!
நன்னாள் தானது நட்டதும் தமிழரசோ!
பொன்னார் புரட்சியார் புகழென வாழ்கவே!

சுதந்திரக் காற்றின் சுவாச முதல்வன்---.சின்னமலை.
உதிக்கப் பாரதம் தன்னனயே விதைத்தான்--சின்னமலை.
ஒற்றுமை ஒன்றே உரமெனச் சொன்னான்---சின்னமலை.
பெற்ற சுதந்திரம் பேணச் சொன்னான் ---சின்னமலை.


கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 1 December 2025

காமராஜர்

நாடார் குலத்தின் நட்சத்திரம்.

நாடார் குலத்தின் நம்பக நட்சத்திரம்.
நம்ப முடியாத அதிசய விசித்திரம்.
ஈடாகாது எந்த மனிதரும்--வளர்
நாடார்குல அடையாளம் காமராஜர்.

எத்தனை உலகம் இன்னும்
தோன்றினாலும்
அத்தனை மனிதரில் மொத்தம் தேடினாலும்
சத்தியம் யாரவர் சரிநிகர் காமராஜர்
சாத்திய மாகுமோ சரித்திரம் காட்டு மோ!

விருது நகர் கண்ட விருது தானவர்.
அரிதானவர் அவர் போல் யார் மனிதர்?
நெறிதவறாப் புனிதர் நேர்மை  இனிதர்
நிசமாய் கண்ட காமராச ரவர்.

தாயானாலும் தள்ளி வைத்தவர்.
தேயம் பெரிதெனத் தனியே வாழ்ந்தவர்.
தன்னலம் பாராது தமிழகம் ஆண்டவர்
தனக்கென யெதுவும் தானே தேடாதவர்.

படிக்க வைத்துப் பாடம் சொன்னவர்.
விடியலைக் காட்டி வேளாண்மை காத்தவர்.
அணைகளைக் கட்டி வெள்ளம் தடுத்தவர்.
மனையும் தொழிலும் தந்த தந்தை யவர்
.
பிரதமப் பதவியை பெரிதென மதித்தவர்
பிறரைத் தேர்ந்தே சரியென விதித்தவர்
ஏழையாய் பிறந்து ஏழையாய் ஆண்டு 
ஏழை சிரிப்பில் இறைவனாய் ஆனவர்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.